உள்ளூர் செய்திகள்

பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றம்

பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றம் நடந்தது. வருகிற மார்ச் 5-ந் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது

மாலை மலர்

அரியலூர் :

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி பிரகன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் பிரகாரத்தை சுற்றி வந்து, கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

இதையடுத்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, கொடி மரத்திற்கும், சாமி, அம்பாளுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மார்ச் 5-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. 6-ந் தேதி மாசி மகத்தையொட்டி மதியம் 12 மணியளவில் தீர்த்தவாரியும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.