உள்ளூர் செய்திகள்

உழவன் செயலில் பதிவு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

உழவன் செயலில் பதிவு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுஅரியலூர் மாவட்டத்தில் வேளாண் திட்டங்கள்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களான பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், விதை கிராம திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட இத்திட்டங்களின் கீழ் 371.43 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதே போல், மாநில அரசு திட்டங்களான மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள திட்டக்கூறுகளான இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு, விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்குதல், நெற்பயிரில் வரப்பு பயிர் சாகுபடிக்கு பயறுவகை விதைகள் மானியத்தில் விநியோகம், நெற்பயிருக்கு துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் இடுதலை ஊக்குவித்தல், உழவர் பெருமக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தில் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் நீடித்த பருத்தி சாகுபடி இயக்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்களின் கீழ் 102.4577 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

மேற்கண்ட திட்டங்களில் 80 சதவீத லக்கீடு 2022-2023 ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாய பயனாளிகளுக்கும், மீதமுள்ள 20 சதவீத ஒதுக்கீட்டினை இதர கிராமங்களில் உள்ள விவசாய பயனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.

எனவே விவசாயிகள் மேற்கண்ட திட்டங்களில் பயன் பெறுவதற்கு விவசாயிகள் உடனடியாக "உழவன் செயலி"யில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில், ஏதேனும் சந்தேகம் இருப்பின் சம்மந்தப்பட்ட வேளாண்மை உதவி அலுவலர், வேளாண்மை அலுவலர் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.