ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவிராயர் மகன் வீரமணி (வயது 38). இவர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் கடந்த 10 ஆண்டுகளாக பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இக்கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் பெட்டி கடைக்கு சீல் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, நகராட்சி ஆணையர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் செல்ல கணேஷ் மற்றும் அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் வீரமணி பெட்டி கடைக்கு சீல் வைத்தனர்.ஜெயங்கொண்டம் வாரச்சந்தை முன்பாகவும், நகராட்சி அலுவலகம் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் மர்மநபர்கள் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் பெண்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது.எனவே அந்த பஸ் நிறுத்தம் அருகே சில சமூக விரோதிகள் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.