வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. 
உள்ளூர் செய்திகள்

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி,அனைத்து துறை அலுவலர்கள் வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.ரங்கோலி போட்டியில் காசிமேஜர் ஸ்ரீ அம்மன் மகளிர் சுய உதவிக் குழு முதல் பரிசு பெற்றுள்ளனர்

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு, நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வாக்காளர் உறுதிமொழியினை எடுத்துக் கொள்ள அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் நடைபெற்ற ரங்கோலி போட்டி, சுவர் இதழ் மற்றும் சுவரொட்டி தயாரித்தல் போட்டி, பாட்டுப்போட்டி, வினாடி – வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவி – மாணவிகளுக்கு பரிசுகள், பரிசுத் தொகையுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ்கள் முதலியன வழங்கப்பட்டன. மேலும் தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்கான ரங்கோலி போட்டியில் மாநில அளவில் தென்காசி சட்டமன்றத் தொகுதி, தென்காசி வட்டம், காசிமேஜர் ஊராட்சி, ஸ்ரீ அம்மன் மகளிர் சுய உதவிக் குழு மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளனர் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) முத்துமாதவன், தனி தாசில்தார் (தேர்தல்) கிருஷ்ணவேல், தனித்துணை தாசில்தார் (தேர்தல்) பாக்கியலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.