சென்னை:
அவதூறு வழக்கில் செப்டம்பர் 9-ந்தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப எம்.பி.-எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இவரது பேச்சு அ.தி.மு.க. வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக கூறி சபாநாயகருக்கு எதிராக, அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, வழக்கின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி உத்தர விட்டிருந்தார்.
இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு செப்டம்பர் 9-ந் தேதி நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் அப்பாவுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.