தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் (தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம்) ஆகஸ்ட் 2023 -ம் ஆண்டுக்கான சேர்க்கை வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பில் சேர விரும்புவோர் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் அசல், நகல்களுடன், தூத்துக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பஸ் சலுகை, இலவச சைக்கிள், பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை, காலனி, பயிற்சிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி நிலைய துணை இயக்குநர், முதல்வரை 94990 55810 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.