உள்ளூர் செய்திகள்

குன்னூர், ஊட்டிக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

பொதுமக்கள் ஓடிப் பிடித்து பஸ்சில் செல்லும் நிலைமை நீடிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் வந்து செல்லுவதற்க்கு அரசு பஸ்களை நம்பியுள்ளனர்.

பகல் நேரங்களில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கினாலும் பெரும்பாலும் மக்கள் பயணம் செய்வதில்லை. இதனால் பஸ்கள்களில் குறைந்த அளவே மக்கள் பயணம் செய்கின்றனர். மாலை வேளைகளில் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது கிராமங்களுக்கு செல்ல பஸ் வசதிகள் ஓரளவு இருந்து வருவதால் அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சிரமமில்லாமல் செல்ல முடிகிறது.

குன்னூர் மற்றும் ஊட்டி பகுதிகளுக்கு செல்ல மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் பொதுமக்கள் என அனைவரும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் பயணம் செய்ய வருகின்றனர். இதனால் அந்த நேரங்களில் குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பஸ்கள் செல்வதால் பொதுமக்கள் ஓடிப் பிடித்து பஸ்சில் செல்லும் நிலைமை நீடிக்கிறது.

எனவே சம்மந்த ப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.