ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது.
அரசு பஸ் மோதி விபத்து
பாக்கியராஜ் நெல்லையில் தங்கியிருந்து ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் அதே ஊரை சேர்ந்த பிரேம்குமார் (28) என்பவரும் பணியாற்றி வருகிறார். நண்பர்களான 2 பேரும் நேற்று ஊருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் இன்று அதிகாலை வேலைக்காக நெல்லைக்கு மொபட்டில் புறப்பட்டு சென்றனர்.
மொபட்டை பிரேம்குமார் ஓட்டி சென்றார். இன்று அதிகாலை 5 மணிக்கு அவர்கள் ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை பகுதியில் சென்ற போது எதிரே தென்காசி நோக்கி சென்ற அரசு பஸ், மொபட் மீது மோதியது.
தொழிலாளி பலி
இதில் பின்னால் இருந்த பாக்கியராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பிரேம்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரேம்குமாரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாக்கியராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி மொபட் மீது மோதிய அரசு பஸ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.