உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே இன்று காலை விபத்து- மொபட் மீது கார் மோதி ஒருவர் பலி

தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.விபத்தில் படுகாயம் அடைந்த சண்முகவேலுக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 49). இவர் இன்று காலை 10.30 மணியளவில் சங்கர் நகரில் இருந்து கே.டி.சி. நகர் நோக்கி தனது மொபட்டில் சென்றார்.

கார் மோதல்

அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் (50) என்பவர் மொபட்டில் அவருடன் பின்னால் அமர்ந்து சென்றார்.

இவர்களது மொபட் தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் அபுதாகீரின் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். சண்முகவேலும் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தாழையூத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று அபுதாகீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சண்முகவேலுக்கு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.