விழுப்புரம்:
திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள் ரியாஸ் (வயது 26), யாசின் (32), சராபுதீன் (28) ஆகியோர் காரில் புதுவைக்கு வந்தனர். இந்த காரினை யாசின் ஓட்டி வந்துள்ளார். புதுவையில் பல்வேறு பணிகளை முடித்து நேற்று இரவு திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர். புதுவை - திண்டிவனம் 4 வழிச் சாலையில் மொளசூர் இடையன்குளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் சென்ற ரியாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். யாசின், சராபுதீன் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்கள் மீட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு கிளியனூர் போலீசார் விரைந்து வந்தனர். ரியாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.