பணகுடி:
நெல்லையில் இயங்கி வரும் அரசின் ஆவின் நிறுவனத்தில் இருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பாக்கெட் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ராதாபுரம் வட்டார பகுதிகளான பணகுடி, வள்ளியூர், வடக்கன்குளம் உட்பட பல இடங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யப்படுவது நடைமுறையில் இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கப்பெறாமல் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலிற்கு குறைந்தபட்ச தொகை வழங்குவதாக கூறப்படுகிறது. இக்காரணத்தை முன்வைத்து கறவை மாடுகள் வளர்ப்போர் தனியாருக்கு பாலை விற்பனை செய்கின்றனர். இதன் எதிரொலியாக ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் வெகுவாக குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.