கைதான அய்யப்பன் 
உள்ளூர் செய்திகள்

சாயர்புரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

2 நாட்களுக்கு முன்பு ரேவதி மொபட்டில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் அவரிடம் 7 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். வழிப்பறியில் ஈடுபட்ட நபர் ஏரல் தாலுகா சிவகளை நாடார் தெருவை சேர்ந்த அய்யப்பன் (24) என்பது தெரியவந்தது.

மாலை மலர்

சாயர்புரம்:

சாயர்புரம் அருகே உள்ள புளிய நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணகுமார். வாழைக்காய் வியாபாரி.

இவரது மனைவி ரேவதி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சாயர்புரத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

ரேவதியின் தந்தை கடந்த 25 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டதால் அவர் தனது தந்தை வீடு உள்ள புதுக்கோட்டையில் இருந்து தனது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துச் செல்வார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரேவதி மொபட்டில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்று விட்டார்.

இது குறித்து தனது கணவர் சரவணகுமாரிடம் தகவல் தெரிவித்து விட்டு சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சாயர்புரம் போலீசார் சி.சி.டி.வி. காமிரா உதவியுடன் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் ஏரல் தாலுகா சிவகளை நாடார் தெருவை சேர்ந்த அய்யப்பன் (24) என்பது தெரியவந்தது. அவரை ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா கைது செய்தார். அவரிடம் இருந்து 7 பவுன் தாலி செயின் மீட்கப்பட்டது.