மாற்றுத்திறனாளி மாணவரை அழைத்து வந்து மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க செய்த மேயர் சண்.ராமநாதன்.  
உள்ளூர் செய்திகள்

மாமன்னர் சிலைக்கு மாற்றுத்திறனாளி மாணவரை மாலை அணிவிக்க செய்த மேயர்

சதயவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.மாற்று திறனாளி மாணவனை ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க செய்து ஆசையை நிறைவேற்றி வைத்தார்

தஞ்சாவூர்:

தஞ்சையில் நேற்று சதயவிழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி, இயக்கம், அமைப்பு, தன்னார்வலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது தஞ்சை அழகிக்குளம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கல்லூரி மாணவர் ஆரவ் அமுதன் (19) மாலை அணிவிப்பதற்காக வந்தார்.

ஆனால் அவரை சில போலீசார் தடுத்து நிறுத்தி அனுமதிக்கவில்லை.

அனைத்து அமைப்பினரும் மாலை அணிவித்த பிறகு மாலை அணிவிக்க வேண்டும் என கூறி திருப்பி அனுப்பினர்.

இதனால் மாணவர் ஆரவ் அமுதன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

இந்த சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா அந்த மாற்றுத்திறனாளி வாலிபரை அழைத்து வர நடவடிக்கை எடுத்தார்.

மேலும் இந்த தகவல் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனே அவர் மாணவர் ஆரவ்அமுதனை அழைத்து வந்து உதவிக்கரங்களோடு ஏற்றி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க செய்து ஆசையை நிறைவேற்றி வைத்தார்.

தொடர்ந்து அவரிடம் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தி ஊக்கப்படுத்தினார்.

பதிலுக்கு மாணவரும் மேயருக்கு மனமார்ந்த நன்றி கூறினார்.

போலீசாரும் மாணவரை பாராட்டி ஊக்கப்படுத்தி காவல்துறை உங்கள் நண்பன் என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்றப்படி செயல்பட்டனர்.

மேயர் மற்றும் போலீசாரின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.