மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் முதல் கெத்தை சாலை, பில்லூர் அணைக்கு செல்வதற்கான பிரதான சாலையாக உள்ளது. இது அடர்ந்த வனப்பகுதி ஆகும்.
எனவே இங்கு யானைகள், காட்டெருமை, மான் மற்றும் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் அங்கு நேற்று ஒரு அரசு பஸ் சென்றது. அப்போது காட்டு யானைகள் கூட்டம் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது.
இருந்தபோதிலும் டிரைவர் ஹாரன் அடித்தபடி அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது பஸ்சில் இருந்த சிலர் யானைகளை போட்டோ எடுத்தனர்.
இதனால் யானைகள் கூட்டம் மிரண்டு காட்டுக்குள் தப்பி சென்றது. கெத்தை ரோட்டில் நின்ற காட்டு யானைகள் ஒருவேளை வெகுண்டு தாக்குதல் நடத்தி இருந்தால், அரசு பஸ்சில் இருக்கும் பயணிகள் நிலைமை கேள்விக்குறியாகி விடும். எனவே வனவிலங்குகள் சுற்றி திரியும் ரோட்டில் அரசு பஸ் டிரைவர்கள் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.