உள்ளூர் செய்திகள்

தெப்பக்காடு- மசினக்குடி நெடுஞ்சாலையை கடந்து சென்ற காட்டு யானைகள் கூட்டம்

வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர். வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு மசினகுடி சாலையில் யானை கூட்டம் சாலையை கடந்து சென்றது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

மசினகுடி, தெப்பகாடு சாலை, மாயார் சாலை, கூடலூர், மைசூர் சாலைகளில் பகல் நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மசினகுடி, தெப்பகாடு நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் 10 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி யானைகளுக்கு வழிவிட்டனர். இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

சில மணி நேரங்களுக்குப் பிறகு யானைகள் தானாகவே சாலையை கடந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது.

மேலும் அந்த சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதை வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிலர் ஆபத்தை உணராமல் அருகில் சென்று செல்போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது. வனத்துறையினர் யானை கூட்டத்தை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.