உள்ளூர் செய்திகள்

தாராபுரம் அருகே பால் வேன் மோதி பட்டதாரி வாலிபர் சாவு

தாராபுரம் உடுமலை சாலையில் காங்கயம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.குடிமங்கலத்தை சேர்ந்த கவுதம் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாராபுரம் :

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா குமார பாளையம் மேற்கு வீதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ஜெயக்குமார் (வயது 22). பி.இ.பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த வேலையாக தாராபுரம் வந்தார். பிறகு மோட்டார் சைக்கிளில் குமாரபாளையம் செல்வ தற்காக தாராபுரம் உடுமலை சாலையில் காங்கயம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது உடுமலையில் இருந்து தாராபுரம் நோக்கி எதிரே அதிவேகமாக வந்த பால் மினிவேன் ஜெயக்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அலங்கியம் போலீசார் வழக்குபதிவு செய்து மினிவேனை ஓட்டி வந்த குடிமங்கலத்தை சேர்ந்த கவுதம் (21) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.