உள்ளூர் செய்திகள்

பூட்டிய வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல்: போலீசார் தீவிர விசாரணை

கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

தூத்துக்குடி:

தூத்துக்குடி திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் சுடலை முத்து. இவர் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 13-ந் தேதி சுடலை முத்து மகன் மதன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முருகேசன் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது மதன் குமார் அவரது சக நண்பரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மதன்குமார் தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரில் உள்ள சுடலைமுத்து வீட்டில் யாரும் இல்லாத போது சிலர் காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி சென்று பெட்ரோல் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்து கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் சுடலைமுத்துவுக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக நேரில் வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சுடலை முத்து புகார் அளித்தார். சுடலைமுத்து மகன் மதன்குமார் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும்போது சுடலைமுத்து குடும்பத்தாரை பழி வாங்க வேண்டும் என்று இதுபோன்று நடத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.