உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி- தம்பதி மீது வழக்கு

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிவேதனுக்கு எந்த ஒரு ஒப்பந்த வேலையும் வாங்கி தரவில்லை.

குளித்தலை:

குளித்தலை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் நிவேதன் (வயது 31). இவர் சொந்தமாக தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் இவருக்கு பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இதையடுத்து மணிகண்டன், நிவேதனிடம் தமிழ்நாடு அரசின் எர்த் ஒர்க் காண்ட் ராக்ட் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய நிவேதன், மணிகண்டனிடம் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிவேதனுக்கு எந்த ஒரு ஒப்பந்த வேலையும் வாங்கி தரவில்லையாம்.

வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மணிகண்டன் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிவேதன் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் குளித்தலை போலீசார் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி லட்சுமி கமலாதேவி மீது வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.