நெல்லை:
செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள கட்டளைகுடியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து சரள் மண் கடத்தப்படுவதாக புளியரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உடனே போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் லாரி, டிராக்டர்களை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.
அதற்குள் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த மணிகண்டன், மதன், அய்யப்பன், அரிகரன், ரமேஷ், கார்மேக கண்ணன், மகேந்திரன், மணி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் சரள்மண் அள்ளுவதற்கான போலி ரசீது தயார் செய்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 1 டிப்பர் லாரி, 3 டிராக்டர்கள், 1 ஜே.சி.பி. உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.