தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 
உள்ளூர் செய்திகள்

7 பேர் விடுதலை தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதிக்கு கவர்னர் ரவி அனுப்பியதாக தமிழக அரசு தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை குறித்த ஆவணங்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, கவர்னரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில், கடந்த மார்ச் 30ஆம் தேதி, 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா?  என அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இந்த கேள்விக்கு தமிழக அரசுத் தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதிலில், பேரறிவாளன் மட்டுமின்றி 7 பேரின் விடுதலை குறித்த ஆவணங்களும் ஜனாதிபதிக்கு  தமிழக கவர்னர் அனுப்பியுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, எந்த தேதியில் ஆவணங்கள் அனுப்பப்பட்டது என தமிழக அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட தலைமை நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

7 பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் கவர்னர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளதும், கவர்னருக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே  மூன்று நாள் பயணமாக தமிழக கவர்னர் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...வகுப்பில் மது அருந்திய கல்லூரி மாணவிகள்- நிர்வாகம் அதிரடி நடவடிக்கை