உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: தொழில் அதிபரின் கைப்பையில் 7 துப்பாக்கி குண்டுகள் சிக்கியது

ராஜ்குமாரின் பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.தனது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்சு பெற்று, கை துப்பாக்கி வைத்திருப்பதாக கூறினார்.

ஆலந்தூர்:

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும், பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரான ராஜ்குமார் என்பவரின் கைப்பையை மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில், 7 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. இதைத்தொடர்ந்து ராஜ்குமாரின் பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தனது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்சு பெற்று, கை துப்பாக்கி வைத்திருப்பதாகவும், பயணத்தின்போது, தவறுதலாக கார் டிரைவர் துப்பாக்கி குண்டு இருந்த கைப்பையை மாற்றி வைத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT