உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே தடைசெய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்ப டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்ப டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலில் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், பாண்டியராஜ், ஏட்டு கருணாகரன், காவலர் குருசாமி தலைமையிலான போலீசார் தென்னம்பாளையம் சாலையில் உள்ள உதயமரத்து கருப்பராயன் கோவில் அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.அவரை விரட்டி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சுண்டமேடு பகுதியை சேர்ந்த சுகந்தராஜ்(55) என்பதும், இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூர் என்பதும் தெரியவந்தது. இவர் மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்வதும் கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 50 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT