உள்ளூர் செய்திகள்

டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சம் கொள்ளை

சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.

மாலை மலர்

சேலம்:

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.

மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.