உள்ளூர் செய்திகள்

காசிமேட்டில் விற்பனைக்கு குவிந்த பெரிய வகை மீன்கள்- விலை குறையாததால் ஏமாற்றம்

இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட காசிமேடு மீன்மார்க் கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மற்ற மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

ராயபுரம்:

காசிமேடு மீன்மார்க் கெட்டில் விடுமுறை நாட்களில் மீன்வாங்க மக்கள் கூட்டம் அதிகம் அலை மோதும். மீன்பிடி தடை காலத்திற்கு பின்னர் கடந்த வாரமாக எதிர்பார்த்த அளவு பெரியவகை மீன்கள் வராமல் இருந்தது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற 400 முதல் 450 விசை படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.

இதனால் பெரிய வகை மீன்கள் விற்பனைக்கு அதிக அளவில் குவிந்து இருந்தன. வஞ்சிரம், வவ்வால், பாறை, உள்ளிட்ட மீன்கள் அதிகமாக காணப்பட்டது.

பெரியவகையாக இருந்ததால் சங்கரா, பாறை, இறால், கடம்பா போன்ற மீன்களின் விலை ரூ.50 முதல் ரூ.100 வரை விலை கூடுதலாக விற்கப்பட்டன. இதேபோல் மற்ற மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே காணப்பட்டது.

இன்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தை விட காசிமேடு மீன்மார்க் கெட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை 2 மணி முதலே மீன்வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்விலை அதிகமாக இருந்ததால் மீன்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் பெரியவகை மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். பெரியவகை வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1000 முதல் ரூ.1100 வரை விற்கப்பட்டது. காசிமேட்டில் மீன்விலை(கிலோவில்) வருமாறு:-

கொடுவா- ரூ.600

சீலா- ரூ.500

சங்கரா- ரூ.500

பாறை- ரூ.600

இறால்- ரூ.400

நண்டு- ரூ.300

நவரை- ரூ.200

கானங்கத்தை- ரூ.200

கடம்பா- ரூ.300