கோவை,
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கியது.
இதையடுத்து காய்ச்சல் பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத் துறைக்கு அரசு அறி வுறுத்தியது. நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைத்து ஊரகப்பகுதி களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி, பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி கோவையில் 40 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 100 மருத்துவ முகாம்கள் வரை நடத்தப்படுகின்றன. இதன் மூலம் கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
கோவையில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20-ஐ கடந்துள்ளது. கடந்த 15-ந் தேதி 1.5 சதவீதமாக இருந்த கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது 4.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 129 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் மட்டுமே 100-ஐ கடந்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதை யொட்டி பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி அதிகரிக்கப்பட்டு உள்ள கொரோனா பரிசோதனைகளில் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த காலங்களை போல பயப்படும் அளவில் பாதிப்பில்லை. இன்புளூயன்சா காய்ச்சல் பாதிப்பு தொடர்பான வழிகாட்டு முறைகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.