பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் 360 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல் அருகே கடைகளுக்கு சப்ளை செய்ய பதுக்கிய 360 கிலோ குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

திண்டுக்கல்:

தமிழகத்தில் குட்கா, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ரகசியமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக திண்டுக்கல்லில் அதிக அளவு குட்கா பொருட்கள் வாகன சோதனையில் சிக்கியுள்ளன.

பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட வெளி மாநில நகரங்களிலிருந்து தமிழகத்திற்கு குட்கா பொருட்கள் கடத்தி செல்லும்போது திண்டுக்கல் மாவட்ட சோதனை சாவடியில் போலீசார் மடக்கிவிடுகின்றனர். இருந்த போதும் சிலர் அவர்களையும் தாண்டி கடத்தி செல்கின்றனர்.

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் காமாட்சிபுரத்தில் குட்கா பதுக்கி ரகசியமாக விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் ஜாபர் சாதிக், செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கழிப்பறையில் 360 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதிகாரிகள் விசாரணையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் இங்கு பதுக்கப்பட்டு அதிகாலை நேரத்தில் கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குட்காவை பறிமுதல் செய்து வியாபாரிக்கு அபராதம் விதித்தனர். குட்காவை தொடர்ந்து பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.