கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நஞ்சுண்ட ஞான தேசிக ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக 10- க்கும் மாடுகள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை மர்ம நபர்கள் கோவிலுக்கு சொந்தமான காளை மாட்டை பிடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து கோவிலில் இருந்தவர்கள் விரைந்து சென்று 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த லூர்துசாமி மகன் பவுன்ராஜ் (வயது 27), இருதரராஜ் மகன் ஜான் எடிசன் (36), அருள்தாஸ் மகன் டோமிக் சேவியர் (32) என்பதும் இவர்கள் மாட்டை திருடி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பவுன்ராஜ், ஜான் எடிசன், டோமிக் சேவியர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.