திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
இந்நிலையில் கோவில் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதாரபதி வரை கடல் அலையின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடல் அலை கரையை தாண்டி தொட்டு சென்றது.
இருந்தபோதிலும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம் போல் புனித நீராடினர். இந்நிலையில் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த சேலத்தை சேர்ந்த தங்கம் (52), புதுக்கோட்டையை சேர்ந்த பாகாம்பிரியா (39), கோயம்புத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (56) ஆகியோர் கடலில் நீராடிய போது அலையின் சீற்றத்தில் சிக்கினர்.
இதில் அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களை, கடற்கரை பாதுகாப்பு பணியில் இருந்த சிவராஜா, சுதாகர், ஆறுமுக நயினார், இசக்கிமுத்து, ராமர் ஆகியோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில் முதல் உதவி சிகிச்சை மையத்தில் முதல் சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.