உள்ளூர் செய்திகள்

காரில் கடத்தி வரப்பட்ட 232 கிலோ கஞ்சா பறிமுதல்- கேரளா வாலிபர்கள் கைது

கஞ்சாவை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சப்ளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சில்லரை வியாபாரிகளையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே காரில் கடத்த முயன்ற 232 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கேரளாவை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

கேரளாவில் இருந்து கஞ்சா கடத்திக்கொண்டு ஒரு கும்பல் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் பாதிரி கிராமத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 2 கிலோ, 5 கிலோ பாக்கெட்டுகளாக இருந்த 232 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர், தொடர்ந்து சரக்கு வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் கேரளா மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் உதயகுமார் (வயது 44), சலாம் மகன் ஆசிப் (25) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து, இவர்கள் இருவரும் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்தனர். இதனை எங்கெங்கு வழங்குகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் கேரளாவில் இருந்து கஞ்சாவை எடுத்துக்கொண்டு சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு, தொடர்ந்து இவர்கள் கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், சில்லறை வியாபாரிகளுக்கு 2 கிலோ, 3 கிலோ, 5 கிலோ விதம் பிரித்து கொடுத்து கஞ்சாவை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சப்ளை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்கள் பல நாட்களாக இந்த தொழிலை செய்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 30-க்கும் மேற்பட்டோர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய சில்லரை வியாபாரிகளையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.