இன்பராஜ் 
உள்ளூர் செய்திகள்

பெரியகுளத்தில் வாலிபரின் கழுத்தை அறுத்த மனைவி, கள்ளக்காதலி கைது

பெரியகுளத்தில் வாலிபரின் கழுத்தை அறுத்த மனைவி மற்றும் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பவுன்துரை மகன் இன்பராஜ் (வயது 30). இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் இன்பராஜ்க்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து இருவீட்டாருக்கும் தெரியவரவே இன்பராஜை கண்டித்துள்ளனர்.

மேலும் முத்துலட்சுமியின் தாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவே அவர்கள் இருவரையும் அழைத்து அறிவுரை கூறினர். ஆனந்தி இனிமேல் நான் இன்பராஜை சந்திக்க மாட்டேன் எனக்கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அதன் பிறகும் இன்பராஜ் தொடர்ந்து ஆனந்தியின் செல்போனில் பேச முயன்றார். எனவே அவரை அழைத்து மீண்டும் அறிவுரை கூற மனைவி முத்துலட்சுமி, ஆனந்தி ஆகியோர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை தாமரைக்குளம் கண்மாய் கரையில் இன்பராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மனைவியும், கள்ளக்காதலியும் சேர்ந்து இன்பராஜின் கழுத்தை அறுத்தது தெரியவந்தது.

ஆனந்தி தன்னுடன் உள்ள தொடர்பை துண்டிக்குமாறு இன்பராஜிடம் தெரிவித்தும் அவர் கேட்காமல் உன்னுடன்தான் வாழ்வேன் என பிடிவாதமாக கூறியதால் 2 பேரும் சேர்ந்து அவரது கழுத்தை அறுத்ததாக போலீசில் தெரிவித்தனர்.

இதனையடுத்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துலட்சுமி மற்றும் ஆனந்தியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.