சேதமான நெற்பயிர்களை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயிகள். 
உள்ளூர் செய்திகள்

கடல்நீர் புகுந்து 100 ஏக்கர் பயிர்கள் சேதம்

விவசாய நிலங்களுக்குள்ளும் கடல்நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்.கடல்நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சியில் கடலோர முள்ள மண்டுவாகரை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர், கடலை, கத்தரி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கத்தால் கடலில் இருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

மேலும் விவசாய விளை நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்தது.

சுமார் 100 ஏக்கர் அளவுக்கு பயிர்களை கடல் நீர் சூழந்துள்ளதால் அவைகள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது,

நாகை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் கடுமையாக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது.

அதன் ஒரு பகுதியாக வடக்கு பொய்கைநல்லூர் பகுதியில் விவசாய நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.

கல்லாரில் பாலம் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் மணல் திட்டுகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால் கடல் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புயல் கரையை கடந்து 5 நாட்களாகியும் கடல் நீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் கடல் நீர் உட்புகுந்ததின் காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுக்கு தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மட்டுமின்றி, தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு தொழில்நுட்ப வல்லூர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கடல் நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.