உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் ஒத்திவைப்பு

ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது.மாரியம்மன் கோவில் ரோட்டில் அல்லிக்கண்மாய் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக 90 வீடுகள் கட்டி குடியிருக்கின்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகராட்சி மாரியம்மன் கோவில் ரோட்டில் அல்லிக்கண்மாய் அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக 90 வீடுகள் கட்டி குடியிருக்கின்றனர்.

இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவின் படி அல்லிக்கண்மாய் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய வருவாய்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.

இவர்களுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் நகர்புற ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க நடவடிக்கை எடுத்தனர். அங்கு போக்குவரத்து, பள்ளி வசதியில்லை என்பதால் நகர் பகுதியில் அரசு இடத்தை வழங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சேக் மன்சூர், தாசில்தார் முருகேசன், டி.எஸ்பி. ராஜா, நகராட்சி, பொது ப்பணித்துறை அலுவலர்கள் முன்னிலையில் வீடுகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ஆக்கிரமி ப்பு அகற்றும் பணி நடந்தது.

அப்போது சிலர் அவர்களாகவே வீடுகளை காலி செய்தனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது பா.ஜனதா ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன், பொருளாளர் தரணி முருகேசன் ஆகியோர் ஆர்டி.ஓ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஆடி மாதம் என்பதால் மக்கள் வேறு வீடு பார்க்க சிரமப்படுகின்றனர். எனவே அடுத்த மாதம் வரை வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்து தற்காலிகமாக ஆக்கிமிரப்பு அகற்றம் ஒத்தி வைக்கப்பட்டது.