வருண் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு 
செய்திகள்

விழுப்புரம் நகரில் வருண் வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

விழுப்புரம் நகரில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரம் நகரில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கலவரத்தில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த காவல்துறையில் பயன்படுத்தப்படும் வருண் என்ற வாகனத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்க மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று வருண் வாகனத்தில் கிருமி நாசினி திரவம் நிரப்பப்பட்டு விழுப்புரம் நகர பகுதியில் தெளிக்கும் பணி நடைபெற்றது. இப்பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அவ்வாகனத்தின் மூலம் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் புதிய பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், ரெயில்வே நிலையம், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் கொரோனா பரவலால் தனிமைப்படுத்தப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.