திண்டுக்கல்:
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொது போக்குவரத்து மற்றும் ரெயில் சேவையை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து கடந்த 1-ந்தேதி முதல் தொடங்கியது.
இன்று (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ் போக்குவரத்து தொடங்குகிறது. அதேபோல் சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதையொட்டி திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் நடைமேடைகள், நடைமேடையில் உள்ள பயணிகளுக்கான இருக்கைகள் என அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளையும் சுத்தப்படுத்தும் பணியிலும் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.