புதுடெல்லி :
கொரோனா விவகாரத்தில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை மோடி அரசு பாரபட்சமாக நடத்துவதாகவும், ஜெர்மனியில் யூதர்களை நாஜிக்கள் நடத்தியது போல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருந்தார்.
அதற்காக அவருக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:-
உள்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, அண்டை நாடுகள் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான்கான் கூறி வருகிறார். அவர் கொரோனாவை கையாள்வது பற்றிய சர்ச்சையில் இருந்து கவனத்தை திசைதிருப்ப முயற்சிக்கிறார்.
உண்மையில், பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்தான் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். அவர்களின் கவலைகளை அவர் தீர்க்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.