சென்னை:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மாணவர் சரத் குமார். பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் கணக்குப் பதிவியல் பாடத்தில் மதிப்பெண் குறைவாக இருந்ததால் மறுகூட்டலுக்காக விடைத்தாள் கேட்டு மனு செய்தார்.
விடைத்தாள் நகல் கிடைத்ததும் தவறான கூட்டலால் 60 மதிப்பெண் குறைத்து போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
கூட்டலில் ஏற்படும் தவறுகளை தவிர்க்க வினா வாரியாகவும், பக்க வாரியாகவும் மதிப்பெண்கள் போடப்பட்டு கூட்டப்படும். இருவகை மதிப்பெண்களின் கூட்டுத் தொகையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
சரத்குமாரின் விடைத்தாளில் 200 மதிப்பெண் உள்ளது. ஆனால் 140 மதிப்பெண்தான் போடப்பட்டுள்ளது. முதல் 12 பக்கங்களில் உள்ள மதிப்பெண்களை மட்டும் கூட்டி விட்டு 30 பக்கங்களை கவனக்குறைவால் விட்டு விட்டார்கள்.
1098 மதிப்பெண் எடுத்துள்ள சரத்குமாருக்கு கூடுதலாக 60 மதிப்பெண் கிடைக்கும்போது நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் மறுகூட்டல் முடிந்து மதிப்பெண் பட்டியல் கிடைப்பதற்குள் நல்ல கல்லூரிகளில் இடங்கள் அனைத்தும் நிரம்பி விடுமே என்று பரிதவிக்கிறார்.
ஆசிரியர் கவனக்குறைவு, சரிபார்க்கும் மேல் அதிகாரியின் கவனக்குறைவால் ஒரு மாணவனின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.