செய்திகள்

தமிழகத்துக்கு ரெட் அலர்ட் - நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் கனமழை குறித்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNRain #TNRedAlert #TNCM #EdappadiPalaniswami

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார்.