செய்திகள்

காமன்வெல்த் போட்டியில் இருந்து தீபா கர்மாகர் விலகல்

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து தீபா கர்மாகர் விலகி உள்ளார். #DipaKarmakar #CommonwealthGames

புதுடெல்லி:

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்தில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர், தீபா கர்மாகர். ரியோ ஒலிம்பிக்கில் 4-வது இடத்தை பிடித்த அவர் மயிரிழையில் பதக்கத்தை பெறும் வாய்ப்பை நழுவ விட்டார்.

கடந்த ஆண்டு கால் முட்டியில் காயமடைந்த 24 வயதான தீபா கர்மாகருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து மீள்வதற்கு தொடர்ச்சியான சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடக்கும் காமன்வெல்த் விளையாட்டில் இருந்து தீபா கர்மாகர் விலகி இருக்கிறார்.

இது குறித்து அவரது பயிற்சியாளர் பிஸ்வேஷ்வர் நந்தி கூறும் போது, ‘காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில் அவர் இன்னும் தயாராகவில்லை. அவர் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார். ஆனால் முழுமையாக ஆயத்தமாவதற்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. ஆசிய போட்டிக்கு (ஆகஸ்டு 18-செப்.2) திரும்ப வேண்டும் என்பதே அவரது இலக்கு’ என்றார். #DipaKarmakar #CommonwealthGames 

SCROLL FOR NEXT