திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி 18-வது வார்டுக்குட்பட்ட சவுராஷ்டிரா காலனி மற்றும் ராமசாமி காலனியில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஜிகா பைப் மூலம் குடிநீர் வழங்க பைப்புகள் பதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 7 மாதமாக முறையான குடிநீர் வருவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
ஒருசில சமயங்களில் வரும் குடிநீரை பலர் மின்மோட்டார் பொருத்தி எடுத்துவிடுவதால் பலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை. முறையான குடிநீர் வரி செலுத்தி வந்தும் குடிநீர் கிடைக்காததால் இப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்கீம்ரோடு சந்திப்பில் காலிகுடங்களுடன் மறியல் செய்த பெண்கள் அவ்வழியாக வந்த அரசு பஸ்சையும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து 30 நிமிடம் நடந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.