திருச்சி:
அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி திருச்சியில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நடிகை சி.ஆர். சரஸ்வதி நிருபர்களிடம் கூறியதாவது:-
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை. இதனை சட்ட ரீதியாக சந்திப்போம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகள் வரை இருந்த சசிகலாவே அ.தி.மு.க.வை வழி நடத்த தகுதியானவர். ஜெயலலிதாவின் ஒவ்வொரு அசைவும் அவருக்கு தெரியும். கட்சியையும், ஆட்சியையும் தினகரன் மீட்டெடுப்பார்.
சசிகலா சிறைக்கு செல்லும் போது எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியையும், கட்சியையும் ஒப்படைத்து விட்டு சென்றார். ஆனால் அவர் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். ஓ.பி.எஸ்.தனியாக இருக்கும் போது எடப்பாடி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். பின்னர் இணைந்த பிறகு எதுவும் கூறவில்லை. இதனை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எந்த கட்சிக்கும் தாவவில்லை. சட்ட மன்றத்திலும் தவறாக நடக்கவில்லை. அவர்களை தகுதி நீக்கம் செய்தது தவறானது. இவ்வாறு அவர் கூறினார்.