செய்திகள்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை டெல்லி பயணம்

புதுவையில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் சந்திக்க மறுப்பதால், நாளை டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேல் தவிர, 20 எம்.எல்.ஏ.க்கள் புதுவை ஓட்டலில் தங்கி உள்ளனர்.

இவர்களில் 19 பேர் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர்.

அவர்கள் மீண்டும் கவர்னரை சந்திப்பதற்கு முயற்சித்து வந்தனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

கவர்னர் சந்திக்க மறுத்தால் ஜனாதிபதியை சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் கூறி இருந்தனர்.

இதுவரை கவர்னரிடம் இருந்த அனுமதி வராததால் இங்கு தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்கள் இன்று அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

அதில், கவர்னர் சந்திக்க மறுப்பதால் டெல்லி சென்று ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

புதுவை ஓட்டல் அறையில் நாளை மதியம் வரையே பதிவு செய்திருந்தனர். எனவே, நாளை மதிய உணவு அருந்தி விட்டு அவர்கள் இங்கிருந்து சென்னை செல்ல உள்ளனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்கள்.

ஜனாதிபதியை சந்திப்பதற்கு டெல்லியில் தினகரன் அணியினர் முன் அனுமதி பெற முயற்சித்து வருகின்றனர். 2-ந் தேதி ஜனாதிபதி அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே, அன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.