செய்திகள்

சசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன், விரைவில் சந்தித்து வாழ்த்து பெறுவேன் - தினகரன் பேட்டி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன், சசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன். விரைவில் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம் தினகரன் இன்று மாலை பெற்றுக் கொண்டார்.  அதன்பின்னர் தினகரன் செய்தியார்களிடம் கூறியதாவது:

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.

எனது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதாவிடம் இருந்தால் மட்டுமே இரட்டை இலை வெற்றி சின்னம்.

ஆர்.கே.நகர் ஜெயலலிதாவின் தொகுதி, அவரின் தொண்டனாக மக்கள் என்னை தேர்வு செய்துள்ளனர். என்னை தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அனைத்து ஸ்லீப்பர் செல்களும் வெளியே வருவார்கள். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.  வெற்றியை வழங்கிய ஆர்.கே.நகர் தொகுதி மக்களை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்.

சசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன். விரைவில் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவேன்.  1 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். அது கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் ஆதரவாளர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.