மும்பை:
மதுமதி, தேவதாஸ், முகல்-இ-ஆஸம், கங்கா ஜமுனா உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்தவர் திலீப் குமார். இவரது நடிப்பில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்ற திரைப்படத்தை தமிழில் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படம் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தது.
பாலிவுட் முன்னாள் கதாநாயகி சாய்ரா பானுவை திருமணம் செய்த திலீப் குமார், கடைசியாக 1998-ம் ஆண்டில் வெளியான ‘கிலா’ படத்தில் நடித்திருந்தார். 60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் உள்ள வீட்டில் பூரண ஓய்வெடுத்து வந்த திலீப் குமாருக்கு திடீரென சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் அவரை சமீபத்தில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் திலீப் குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்திய சினிமாத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பாபா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டிலும், மத்திய அரசின் மிகஉயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதினை கடந்த 2015-ம் ஆண்டும் திலீப் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிகிச்சைக்கு பின்னர் சற்று குணமடைந்த திலீப் குமார் இன்று மாலை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.