செய்திகள்

டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு நாள் தோறும் ரூ.9 கோடி இழப்பு

பெட்ரோல்- டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

பெட்ரோல்- டீசல் விலை தினமும் உயர்ந்து வருவதால் அரசு போக்குவரத்து கழகத்துக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களின் மூலம் 21,928 பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புறம் மட்டுமின்றி தொலை தூர கிராமங்கள், மலைப் பகுதிகளுக்கும் 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பஸ்கள் சென்று வருகின்றன. இதன் மூலம் தினமும் 2 கோடி மக்கள் பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி 1 லிட்டர் டீசல் விலை 67 ரூபாய் 23 காசாக இருந்தது. அதன் பிறகு படிப் படியாக உயர்ந்து இன்றைக்கு 71 ரூபாய் 82 காசாக விலை உயர்ந்து விட்டது. அதாவது கடந்த 4 மாதத்தில் மட்டும் டீசல் விலை 4 ரூபாய் 59 காசு உயர்ந்துள்ளது.

இதனால் போக்குவரத்து கழகங்கள் மீண்டும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

போக்குவரத்து கழகங்களில் ரூ.9 கோடி அளவுக்கு தினமும் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் கடந்த ஜனவரி மாதம்தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் ரூ.4 கோடியாக நஷ்டம் குறைக்கப்பட்டது.

இந்த சூழலில் பஸ் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் 30 சதவீதம் பேர் பஸ்களில் பயணம் செய்வதற்கு பதில் ரெயில் பயணத்துக்கு மாறி விட்டனர். இதனால் அரசு பஸ்களில் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கவில்லை.

பஸ் ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டதால் அதன் மூலமும் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நஷ்டத்தை சரி கட்டுவதற்காக உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தால் நிம்மதியடைந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் இப்போது டீசல் விலை உயர்வால் மீண்டும் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஏனென்றால் இப்போது போக்குவரத்து கழகங்களுக்கு மீண்டும் நாள் தோறும் ரூ. 9 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படத்தொடங்கி உள்ளது.