செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி முகம்: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் தினகரன் மரியாதை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி முகம் காட்டி வரும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களில் இன்று மரியாதை செலுத்தினார்.

மாலை மலர்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், குக்கர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய டிடிவி தினகரன் 9-வது சுற்று நிலவரப்படி 44,094 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

தனக்கு அடுத்தபடியாக வந்த அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் வாங்கிய வாக்குகளை காட்டிலும் சுமார் 20,000 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி முகம் காட்டி வரும் டிடிவி தினகரன், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அருகாமையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கும் சென்ற அவர் அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தினகரனுடன் அவரது ஆதரவாளர்களான தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.