செய்திகள்

ஐஸ்வர்யா ராய் தான் இந்திய அழகு, டயனா ஹைடன் இல்லை - திரிபுரா முதல்வர் கண்டுபிடிப்பு

மஹாபாரதம் காலத்திலேயே இண்டர்நெட் இருந்தது என பேசி நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகிய திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். #BiplabDeb

மாலை மலர்

அகர்தலா:

திரிபுரா முதல்வராக சில மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றவர் பிப்லப் தேப், பாஜக.வை சேர்ந்த இவர் சில நாட்களுக்கு முன்னர், “மஹாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது” என கூறியிருந்தார். இந்த கருத்து கிண்டலுக்கு உள்ளாகவே, “குறுகிய மனம் கொண்டவர்களால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என சமாளித்தார்.

இந்நிலையில், அகர்தலா நகரில் கைத்தறி பயிற்சி பட்டறை ஒன்றில் இன்று பிப்லப் தேப் கலந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில், “சர்வதேச நிறுவனங்கள் இந்திய கலாச்சாரத்தை சேர்ந்த பொருட்களை உருவாக்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொள்கின்றன. இந்தியாவில் இருந்து இதுவரை ஐந்து பேர் உலக அழகி பட்டம் வென்றுள்ளனர். டயானா ஹைடன் கூட வென்றுள்ளார். ஆனால், அவரிடம் இந்திய அழகை நான் காணவில்லை. ஐஷ்வர்யா ராயிடம் அந்த அழகு உள்ளது” என பிப்லப் பேசினார்.

1999-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற டயானா ஹைடன் ஆங்கிலோ இந்தியன் என்பது குறிப்பிடத்தக்கது. #BiplabDeb