செய்திகள்

டிடிவி தினகரனை எந்த காலத்திலும் மன்னிக்கவே மாட்டேன்- திவாகரன்

அ.ம.மு.க. ஒரு மூழ்கும் கப்பல் என்றும் வி‌ஷக்கிருமியாக உள்ள டிடிவி தினகரனை எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டேன் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார். #Dhivakaran #TTVDhinakaran

மாலை மலர்

திருவாரூரில் அண்ணா நினைவுநாளையொட்டி அவரது சிலைக்கு அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் திருவாரூர் பிடாரி தெருவில் அண்ணா திராவிடர் கழக அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். இதையடுத்து திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அண்ணாவின் பெயரில் மிகச்சரியான கால கட்டத்தில் அண்ணா திராவிடர் கழகம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அண்ணா, இளைஞர்கள் மெச்சத்தகுந்த தலைவராக வாழ்ந்து மறைந்துள்ளார் திராவிட இயக்கத்தை அரியணை ஏற்றிய சிறந்த தலைவர்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை ரூ. 6000 என்பது குறைவாக உள்ளதை தவிர, அதில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளன.

தேர்தலை மையப்படுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக கூறினாலும் இந்த பட்ஜெட்டால் மக்கள் கஷ்டப்படவில்லை.

அ.ம.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது உண்மையா? என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் தினகரன் அனைவரையும் கஷ்டப்படுத்தி வருகிறார். இம்சைப்படுத்துகிறார். கிச்சன் கேபினட் நடத்துகிறார். தினகரன் நடத்துகின்ற அ.ம.மு.க. ஒரு மூழ்கும் கப்பலாக உள்ளது.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய எனது கட்சி ஒரு தடையாக இருக்காது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாய பகுதியான காவிரி டெல்டாவில் செயல்படுத்த வேண்டியதில்லை. இதனை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க நான் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை.

அண்ணா திராவிடர் கழகம் அண்ணாவின் கொள்கைகளை ஏந்தி அனைத்து கட்சிகளுக்கும் நன்மதிப்பு கொடுத்து வருகிற இயக்கம். வி‌ஷக்கிருமியாக உள்ள தினகரனை எந்த காலத்திலும் மன்னிக்க மாட்டேன்.