சந்தியா 
செய்திகள்

தர்மபுரி அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவி பலி

தர்மபுரி அருகே இன்று டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள பேடற அள்ளி கிராமத்தை சேர்த்தை சேர்ந்தவர் மாதன். கூலி தொழிலாளி. இவருடைய மகள் சந்தியா(வயது 12).

இவள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் இவளை பெற்றோர் ஜப்த சமூத்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சாதாரண காய்ச்சல் என அனுமதிக்கப்பட்ட சந்தியாவுக்கு தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வந்தது. எனினும் காய்ச்சல் குணமாகவில்லை. தொடர்ந்து காய்ச்சல் அதிகரித்து வந்தது.

இதையடுத்து சந்தியா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சந்தியாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வார காலமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்தியா இன்று மதியம் 12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இதனை அறிந்த பெற்றோர் மகள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பேடறஅள்ளி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஜப்த சமூத்திரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சென்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்கள்.

ஆகவே அந்த கிராமத்தில் பரவும் மர்ம காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் எனவும், கொசுக்களை ஓழிக்க கிராமம் முழுவதும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.