செய்திகள்

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு - அதிமுக பிரமுகர்கள் 3 பேரும் சிறையில் இருந்து விடுதலை

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அதிமுக பிரமுகர்கள் 3 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit

பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு கடந்த 2000ம் ஆண்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி புறநகரான இலக்கியம்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பஸ் மீது அ.தி.மு.க.வினர் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 மாணவிகள் தீயில் கருகி பலியானார்கள். 16 மாணவிகள் காயம் அடைந்தனர்.

இந்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்கள் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பனின் மரண தண்டனையை கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆயுள் தண்டனையாக குறைத்தது.

பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள சுமார் 1800 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. அந்த கைதிகள் பற்றிய விபரம் மற்றும் அவர்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் என்பன போன்ற தகவல்களை திரட்டி கோப்புகளாக தயாரித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு அனுப்பியது.

அதன்பிறகும் அவர்களை விடுவிக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு புதிய ஆவணம் அனுப்பப்பட்டது. அதில், “பஸ் எரிப்பு திட்டமிட்டு நடந்தது அல்ல. உணர்ச்சி வேகத்தில் நடந்து விட்ட ஒன்று” என்று தமிழக அரசு குறிப்பிட்டது. தமிழக அரசின் இந்த புதிய விளக்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் கவர்னர் பன்வாரிலால் புரோகித். அத்துடன், 3 பேரையும் விடுவிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் வேலூர் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர். #DharmapuriBusBurning #ADMK #TNGovernor #BanwarilalPurohit

SCROLL FOR NEXT