விதை மையத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு 
செய்திகள்

தாராபுரம் பகுதியில் விதை மையங்களில் அதிகாரி ஆய்வு

தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் விதை மையங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஆய்வுமேற்கொண்டார்.

மாலை மலர்

தாராபுரம்:

தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் விதை மையங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் எ.மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் தாராபுரம் பகுதி விவசாயிகளின் நீர் பாசன ஆதாரமாக விளங்குவது அமராவதி அணை. இந்த ஆண்டு பெய்த மழையில் நீர்மட்டம் 84 அடி வரை உயர்ந்து உள்ளது. இதனால் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறத்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாசனம் பெறும் கல்லாபுரம், கணியூர், மடத்துகுளம், காரத்தொழுவு பகுதியில் தென்னை சாகுபடி பரவலாக காணப்பட்டாலும் நெல் சாகுபடியே அதிகமாக உள்ளது.

தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் விதை மையங்களில் உற்பத்தியாகும் நெல் விதைகள் தற்போது விதைப்பண்ணை அமைக்க தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு குறுகிய கால, நெல் ரகங்களின் ஆதாரநிலை விதை பண்ணை அமைக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் குறுகிய கால மற்றும் மத்திய கால நெல் ரகங்களான எ.எஸ்.டி 16, எ.டீ.டி 37, எ.டீ.டி 45, பிபீடி 5204 , எ.டீ.டி 42 வினியோகத்திற்கு தயார் நிலையில் உள்ளது.

மேலும் இப்பகுதியில் விதைப்பண்ணை அமைக்கும் உற்பத்தியாளர்கள் காலதாமதமின்றி குறித்த காலத்தில் நாற்று வயல் விட்டு விதைப்பண்ணை அமைக்க வேண்டும். நெல் கிடங்கில் பூச்சி தாக்குதல் இன்றி விதை நெல் மூட்டைகளை அட்டகங்கள் இட்டு அடுக்க வேண்டும், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தகுந்த மருந்து மற்றும் இயற்கை வழிமுறைகளை பயன் படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, தாராபுரம் விதைச்சான்று அலுவலர்கள் லதா மற்றும் மணி ஆகியோர் இருந்தனர்.